Elizabeth Fry Missionary Story in Tamil

    எலிசபெத் ஃப்ரை  

       

    

         இங்கிலாந்து நாட்டில் மிகவும் செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்த எலிசபெத் வாலிபப் பருவத்தில் இயேசுவை ஏற்றுக் கொண்டார். நார்விக் பட்டணத்தில் தன்னுடைய ஊழியத்தைத் துவக்கினார். ஆரம்பத்தில் நார்விக் நகரின் ஏழை எளியவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வேதாகமத்தைக் கற்றுக்கொடுப்பதும், குழந்தைகளுக்கு ஞாயிறு பாடசாலை நடத்துவதும் அவருடைய ஊழியமாக இருந்தது. 

திருமணமான பின்பு எலிசபெத் ஃப்ரை இங்கிலாந்து நாட்டில் எஸ்ஸெக்ஸ் என்னும் நகரில் ஊழியத்தைத் தொடர்ந்தார். சுகவீனர்களைப் பராமரித்தும்,  சுவிசேஷத்தைப் பிரசங்கித்தும் வந்த எலிசபெத், நியூகேட் என்று அழைக்கப்படும் சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகள் சீர்கெட்ட நிலைமையில் இருப்பதை அறிந்தார்.  

நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அங்கிருந்த மிகச்சிறிய அறையில் அடைக்கப்பட்டு, எவ்வித சுகாதாரமும் இல்லாமல் அழுக்கிலும், பயங்கரக் குளிரிலும், பசியிலும் வாடிக்கொண்டிருப்பதைக் கண்டவுடன், எலிசபெத் நகரத்தின் மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினார். அதுவரை கைதிகளைப் பற்றிய அக்கறை இல்லாத  அரசாங்க அதிகாரிகள் நாளடைவில் எலிசபெத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார்கள். சிறைச்சாலையில் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின.

ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் குறித்த நேரத்தில் ஜெபமும். வேத வாசிப்பும் நடத்தப்பட்டது. சிறைச்சாலைகளில் இருந்த பெண்களுக்கு தையற் கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இதுவரை வாழ்வை விரக்தியுடன் கழித்த கைதிகள் தையற் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட ஆரம்பித்தார்கள். அதில் கிடைத்த வருமானம் அவர்கள் நேர்மையோடும், சுய மரியாதையோடும் கண்ணியத்தோடும்  நடக்க உதவியது.

அந்த நாட்களில் லண்டன் நகரிலிருந்து கைதிகளை கப்பலில் ஏற்றி வெகு தூரத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள சிறைகளுக்கு நாடுகடத்துவது வழக்கமாயிருந்தது. அப்படிக் கொண்டு போகும்போது பெண் கைதிகளை அதிகாரிகள் மிகவும் ஈனமாக நடத்தினார்கள். 

நீண்ட கடல் யாத்திரையின்போது கூட கைதிகளின் விலங்குகளைக் கழற்றுவதில்லை. நோயுள்ளோருக்கு எந்தவித மருத்துவ சிகிட்சைகளும் கொடுக்கப்படுவதில்லை. ஆஸ்திரேலியாவை சென்றடைந்த பின்பும் கைதிகள் அடிமைகளாகவே வேலைசெய்ய வைக்கப்பட்டார்கள். இவைகளை அறிந்த  எலிசபெத்  அரசாங்க அதிகாரிகளிடம் முறையிட ஆரம்பித்தார். அவருடைய  விடாமுயற்சியினால், இக்கொடுமைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தடுத்து நிறுத்தப்பட்டன.

இங்கிலாந்தில் நியூகேட் நகரில் ஆரம்பித்த சிறை சீர்திருத்தங்கள் விரைவில் நாட்டிலுள்ள மற்ற சிறைச்சாலைகளிலும் வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொரு நேரமும் கைதிக்கப்பல்கள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போது, எலிசபெத் அங்கு சென்று, எல்லோருக்கும் ஒரு வேதாகமமும், கம்பளி உடைகள் பின்னுவதற்கு தேவையான  நூல்களையும், ஊசிகளையும் கொடுத்து அன்புடன் வழியனுப்பிவிட்டு வருவார். இப்படி ஒன்றிரண்டு  நாட்கள் அல்ல, 25 வருடங்களாக ஊழியம் செய்தார்.

பெண்கள் அதிகமாக வெளியே செல்வதை சமுதாயம் விரும்பாத காலக்கட்டத்தில், எலிசபெத் ஃப்ரையைச் சிறைச்சாலை ஊழியத்திற்கென்று துணிச்சலுடன் செயல்பட வைத்தது - கர்த்தர் மீது  அவர் வைத்த அளவற்ற அன்பும், கர்த்தருடைய அழைப்பும், கத்தருக்காக சேவை செய்ய வேண்டும் என்ற மனஉறுதியும்தான்.

கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கவும் வந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை காவலில் அடைக் கப்பட்டவர்களுக்கு நாம் அறிவிக்கும்போது, ""காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்..."" (மத் 25: 36) என்று கர்த்தர் சொல்லி மகிழுவார்.

உலகிற்கு எலிசபெத் ஃப்ரை ஒரு சிறை சீர்திருத்தக்காரர் என்று மட்டுமே தோன்றினாலும், கிறிஸ்தவ வட்டாரத்தில் அவர் "சிறைக் கைதிகளின் மிஷனரி' என்றே அழைக்கப்படுகிறார். சிறைச்சாலைகளில் நடைபெறும் ஊழியங்களுக்காக தொடர்ந்து ஜெபியுங்கள்.                              



Comments